Wednesday 11 January 2012

அகிரா குரொசாவா - பகுதி ஒன்று


அகிரா குரொசாவா
பகுதி ஒன்று

எஸ்.ஆனந்த்

தலைவன் வஸிஷு அணிவகுத்து நிற்கும் படையினரிடம் அரண்மனையின் இரண்டாம் தளத்திலிருந்து கர்ஜனையுடன் ஆணைகளிட்டுக் கொண்டிருக்கிறான்...

எங்கிருந்தோ திடீரென பாயும் ஒரு அம்பு.. அடுத்து ஒன்று, அடுத்து என ...

.அவனுடைய படை வீரரிடமிருந்து அவனை குறிவைத்து சரமாரியாகப் பாயும் அம்புகள்.. . .

நிலை தடுமாறி வெறியுடன் கீழே இறங்கி வருகிறான் உடலெல்லாம் அம்புகள், கழுத்தில் ஒன்று ....

அவன அதுவரை நடத்திச் சென்ற படைவீர்ர் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்க...

வெறியுடன் ஆக்ரோஷமாக உருவிய வாளுடன், காலை எடுத்து முன்னே வைக்கும் போது நிலையிழந்து கீழே விழுகிறான். உயிர் பிரிகிறது.

அகிரா குரொசாவாவின் ‘Throne of Blood’ திரைப்படத்தின் மெய்சிலிர்க்கவைக்கும் இறுதிக் காட்சிகளில் ஒன்று..

கதை சொல்வதில் உணர்ச்சிகளையும் காட்சிகளில் பிரம்மாண்டத்தையும், கொண்டு அற்புதமாக உருவாக்கப்பட்டிருப்பவை குரொசாவாவின் படைப்புகள். குரொசாவா தனக்கென தனிப் பாணியை உருவாக்கிக்கொண்டவர். ஒரு சிறு காட்சியில் கூட எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காது, தன் முழு உழைப்பயைம், கவனத்தையும் கொண்டு திரைப்படஙகளை உருவாக்கிய மேதை. உலகளவிலும், நமது நாட்டிலும் அதிகம் அறியப்படும் ஜப்பானிய இயக்குநர்.

இவ்வருடம் (2010) குரொசாவாவின் நூறாவது பிறந்த தின நினைவாக எங்கள் திரைப்பட சங்கத்தில் நடந்த திரையிடுதலில் அவரைப்பற்றிய ஆவணப்படத்துடன் ‘‘Throne of Blood’’ திரைப்படம் திரையிடப்பட்டது. 140க்கு மேல் இருக்கைகள் கொண்ட அந்த அரங்கம் வழக்கத்திற்கு மாறாக அன்று நிறைந்து, பலர் நின்று கொண்டு படத்தைப் பார்க்கவேண்டியதிருந்தது. இவரது படங்களைப் பார்த்திராதவர் கூட இவர் பெயரை அறிந்திருக்கும் அளவு நம்மூரில் இந்த மேதையின் பெயர் பிரபலமானது.

பிரெஞ்சு புதிய அலை சினிமா பத்திரிகை ‘ கஹியே தூ சினிமா’வின் நேர்காணலில் அவர் யதார்த்தவாதியா அல்லது ‘Romantic’ஆ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ஒரு sentimentalist என்று பதிலளித்தார். மனிதத்துவத்தை மையப்படுத்தும் கதைகளைக் கொண்டே தனது அனைத்து திரைப்படங்களையும் உருவாக்கினார். அவரது திரைப்படங்கள் தத்துவார்த்தமான கேள்விகளும், தேடல்களும் கொண்டவை.

குரொசாவா 1910 ஆம் ஆண்டு ஜப்பானில் டோக்கியோவின் ஒமோரி மாவட்டத்தில் பிறந்தவர். சாமுராய் குலவழிக் குடும்பம். பள்ளியில் படிக்கும் காலத்தில் வாட்பயிற்சியும் பெற்றார். சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுடனிருந்தார். தாஸ்த்தோவ்ஸ்கி, கார்க்கியின் எழுத்துக்கள் அவரைக் கவர்ந்தன. தந்தை குடும்பம் முழுவதையும் திரைப்டக் காட்சிகளுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம். பள்ளிப்படிப்பு முடிந்தபின் ஓவியராகப் பயிற்சி பெற்றார். இலக்கியத்திலும் செவ்வியல் இசையிலும் ஈடுபாடு அதிகரித்தது. நாடகங்களுக்குச் சென்றார். திரைப்படங்களில் மனம் நாட்டம் கொண்டது.

திரைப்பட அரங்குகளில் மேற்கத்திய மௌன திரைப்படங்களுக்குக் கதை சொல்லும் ’பென்ஷி’யாக அவர் சகோதரர் பணிபுரிந்ததால், தரமான பல ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய மௌன திரைப்படங்களை காண முடிந்தது. இடதுசாரி கலைஞர்கள் இயக்கம் ஒன்றில் சிறிது காலம் இணைந்திருந்தார் அரசியலிலும் ஓவியக்கலையிலும் ஈடுபாடு குறைய, திரைப்படக் கலையில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.

பேசும் படங்கள் அறிமுகமானபின் வேலையிழந்த அவர் சகோதரர், வேலையிழந்த ’பென்ஷி’களுக்காக ஸ்டுடியோக்களுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் தோல்வியடைந்த்தது. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். 1933 இல் நிகழ்ந்த தமையனின் தற்கொலையும், அதற்கு பத்து வருடங்களுக்கு முன் 1923இல் குரொசாவா நேரடியாக காண நேரிட்ட காண்ட்டோ நில நடுக்க அழிவுகளும் அவரது இள மனதை வெகுவாகப் பாதித்திருந்தன.

பின்னாளில் தொஹோ ஸ்டுடியோவாக மாறிய பி சி எல் நிறுவனத்தில் 1936 இல் சேர்ந்து, இயக்குநர் யமமோட்டோவின் குழுவில் ஒருவராக பணிபுரிந்தார். முழு சுதந்திரத்துடன் பணிபுரிய முடிந்தது. விரைவில் குழுவின் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டார். நருசே (Naruse) போன்ற பிற இயக்குநர்களிடமும் உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இந்நேரம் அவர் எழுதிய திரைப்பட கதை வசனங்கள், பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றன. பிற ஸ்டுடியோக்களுக்கு கதை வசனம் எழுதிக் கொடுக்க தொடங்கினார்.

குரொசாவா இயக்கிய முதல் திரைப்படம் ‘Sugata Sanshiro” (1943). ஜப்பானில் ஜூடோ தற்காப்புக் கலை ஆரம்பித்த மெய்ஜி காலத்தில் நிகழும் கதை. இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற, ஜப்பானியத் திரையுலகில் கவனம் பெற்றார். ‘Sugata Sanshiro”வின் இரண்டாவது பகுதியுடன் சேர்த்து 1947 வரை ஐந்து திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாகின. குரொசாவாவும் அவரது சம கால இயக்குநர்களும் 1952 வரை ஜப்பானில் இருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசின் கடுமையான தணிக்கை விதிகளை பின்பற்றிப் படமெடுக்க வேண்டியிருந்தது.
குரொசாவாவின் தனித்துவ பாணியின் தொடக்கம் 1948 இல் வெளியான ’Drunken Angel’. சேரிப் பகுதி ஒன்றில் மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்துவரும் மருத்துவர் சனதாவும்; அப்பகுதியின் தாதாவான ஜப்பானிய ‘ம்ஃபியா’ யக்கூஸாவைச் (Yakuza) சேர்ந்த மட்சுனாகாவும் இரு முக்கிய பாத்திரங்கள். இரண்டாவது உலகப் போரில் தோல்வி அடைந்ததால் அவமானமுற்று கலக்கமடைந்திருந்த ஜப்பானிய இளைஞர்களின் அன்றைய நிலையைப் பிரதிபலிப்பதாக, வனமுறையை மட்டுமே நம்பும் மட்சனாகவின் பாத்திரம் வடிவமைக்கப்ட்டிருக்கிறது.

மட்சுனாகா, தனக்கு காசநோய் தாக்கியிருப்பதைத் தெரிவித்து அறிவுரை அளிக்கும் சனதாவைக் காணும்போதெல்லாம் அலட்சியம் செய்வதுடன் கோபத்தில் அவரை தாக்கவும் செய்கிறான். காச நோய் முற்ற, அப்பகுதியின் யக்கூஸா தலைவன் தகுதி பறிக்கப்பட்டு தெருவில் விடப்படுகிறான். சனதா அவனைத் தன் வீட்டில் தங்க வைத்து மருத்துவம் செய்கிறார். நல் வாழ்க்கையத் தேர்ந்தெடுக்கக் கிடைதத அனைத்து வாய்ப்புகளையும் நழுவவிட்டு, யக்கூஸா குழுவில் அவனுடைய இடத்தைப் பறித்துக்கொண்டவனால் இறுதியில் கொலைசெய்யப்டுகிறான்.மட்சுனாகாவைக் காப்பாற்ற முடியாமற் போனதை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் சனதாவை, அவர் உதவியால் காச நோய் குணமான ஒரு இளம் பெண், மகிழ்ச்சியுடன் இனிப்பு உண்ண அழைத்துச் செல்வதுடன் படம் முடிகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஜப்பான் அடைந்திருந்த அவல நிலையின் குறியீடாக சேரிக் குடியிருப்பின் நடுவில் ஒரு பெரிய கழிவு நீர்க் குட்டை காட்சிகளில் மைய இடத்தைப் பெறுகிறது.

1965 வரை குரொசாவாவின் படங்களில் தொடர்ந்து நடித்த தொஷிரோ மிஃபூனே (Toshirô Mifune), தனது இறுதி வாழ்நாள்வரை அவர் படங்களுக்கு இசையமைத்த ஃபுமியோ ஹயசாகா (Fumio Hayasaka) இருவரும் இப்படத்திலிருந்து குரொசாவாவுடன் இணைகின்றனர். மருத்துவர் சனதாவாக நடிக்கும் தகாஷி சிமுராவும்(’இக்குரு’ பட நாயகர்) தொடர்ந்து குரொசாவா படங்களில் நடித்தவர்.

Stray Dog (1949) திரைப்படத்தில் போலீஸ் பணியில் புதிதாக சேர்ந்த முரகாமியின் கைத்துப்பாகி பஸ்ஸில் செல்லும்போது திருடப்பட்டுவிடுகிறது. திருடியவனைப் பிடித்து கைத்துப்பாக்கியை மீட்பதற்காக ஊரெல்லாம் அலைந்து தேடுகிறான். ஒரு கொலையில் அத் துப்பாக்கி பயன் படுத்தப்டுகிறது. இறுதியில் மேலதிகாரி ஒருவரின் உதவியுடன் கொலையாளி பிடிக்கப்பட்டு, துப்பாக்கி மீட்கப்படுகிறது. முரகாமியாக மிஃபூனேயும் அதிகரியாக தகாஷி சிமுராவும் தோன்றுகின்றனர். போருக்கு பிந்தைய ஜப்பானின் அவல நிலை இப்படத்திலும் ஆழமாகச் சித்தரிக்கப்படுகிறது. 1950 இல் இரு படங்கள். முதலில் Shûbun வெளியானது.அடுத்து வெளிவந்த ’ரஷோமோன்’ குரொசாவாவிற்கு உலக இயக்குநர்கள் வரிசையில் அழியாத இடத்தைப் பெற்றுத்தந்த திரைப்படம். பழம்பெரும் க்யோட்டோ நகரின் தென்புற ரஷோமோன் வாயிலில் கொட்டும் மழைக்காக ஒதுங்கியிருக்கும் மூவர் பேசிக்கொண்டிருக்க கதை துவங்குகிறது. காட்டு பாதை வழியே பயணம் செய்யும் ஒரு சாமுராய் கொல்லப்ப்பட்டு அவன் மனைவி கற்பழிக்கப்பட்ட செய்தியை மத குரு சொல்ல, உடனிருக்கும் மரம் வெட்டி காட்டினுள் சாமுராயின் உயிரற்ற உடலைத் தான் கண்ட நிகழ்ச்சியை விவரிக்கிறான். மூன்றாவது நபரான வழிப்போக்கன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

அடுத்து, காவல் நிலையம். கொல்லப்பட்ட சாமுராயின் மனைவி நடந்ததைச் சொல்கிறாள். கணவனையும் தன்னையும் காட்டுப் பாதையில் வழி மறித்த கொள்ளையன் தஜிமோரோ, கணவனைக் கட்டிப்போட்டுவிட்டு தன்னை கற்பழித்துவிட்டுச் சென்றுவிட, கணவன் கத்தியால் தன்னை மாய்த்துக் கொண்டதாகக் கூறுகிறாள். கைது செய்யப்பட்டிருக்கும் தஜிமொரோ இதற்கு நேர்மாறாக, கறப்பழித்தபின் சாமுராயின் மனைவி தன்னை விரும்பி, தன்னுடன் வருவதற்கு வேண்டிக் கொண்டதாகவும், தன் கணவனை கொன்றுவிட சொன்னதாகவும் சொல்கிறான். வாட் சமரில் சாமுராயை அவன் கொன்றபின், மனைவி தப்பி ஓடிவிட்டதாக சொல்கிறான்.

ஒரு சாமியாடி மூலம் இறந்தவனின் வாக்குமூலத்தைக் கேட்கிறோம். மனைவி தன்னை கற்பழித்த திருடன் தஜிமோரோவுடன் சென்றுவிட விரும்புகிறாள். கோபத்திலிருக்கும் சாமுராயிடம் அவளைக் கொன்றுவிடுமாறு தஜிமோரோ சொல்கிறான். அவள் தப்பித்து ஓடிவிடுகிறாள். கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் சாமுராய், திருடன் தஜிமோரோ சென்றபின், கத்தியால் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

இறுதியாக, மரம் வெட்டி தான் சொல்லாமல் மறைத்ததாக, நடந்தவற்றை மீண்டும் விவரிக்கிறான். கற்பழித்தபின் அப்பெண்ணை தன்னுடன் வந்துவிடுமாறு தஜிமோரோ கெஞ்சுகிறான். தனக்காக இரு ஆண்களும் வாட் சண்டையிட்டு, வெற்றிபெற்றவர் தன்னை அடைவதுதான் முறை என்கிறாள். தொடரும் வாட் சமரில் கணவன் கொல்லப்படுகிறான். மனைவி தப்பித்து ஓடிவிடுகிறாள். தஜிமோரோ, சாமுராயின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, குதிரையுடன் சென்றுவிடுகிறான்.நடந்த நிகழ்வுகள், அதைக் காண நேரிட்ட மரம் வெட்டியாலும், அந்நிகழ்வுகளில் நேரடி தொடர்புடையவர்களாலும் விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சொலபவரின் கோணத்தில், நடந்ததை திரையில் காண்கிறோம். நான்கு பேர்கள் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யார் சொல்வது உண்மை, யார் கொலையாளி என்பவை பதில் கிட்டாத கேள்விகளாகின்றன.

’உண்மை’ என்பது என்ன என்பதற்கான ஒரு தியானம் என விமரிசகர்களால் சிலாகிக்கப்படும் படைப்பு ‘ரஷோமோன்’. குரொசாவாவின் வழக்கமான நேர்கோட்டுக் கதை சொல்லலிலிருந்து இத்திரைப்படம் மாறுபடுகிறது. ரஷோமோனை ஒரு அறிவியல் புதிராகக் கொள்ளலாம். தத்துவ அடிநாதங்களுடன் கூடிய சிக்கலான ஒரு புதிருக்குள் நம்மை குரொசாவா அழைத்துச் செல்கிறார்.

நிகழ்ந்தவற்றை வெவ்வேறு கோணங்களில் ஐந்து முறைகள் திரையில் காண்கிறோம். ஒவ்வரு முறையும் புதிதாகக் காண்பதாகவே உணருகிறோம். ஒவ்வொரு முறையும் வாட் சண்டை காட்சிகளும் வேறுபடுகின்றன. மனைவி சொல்லும் கதையில் இருவரின் ஆக்ரோஷமான வாட் சணடையையும் இறுதியாக மரம் வெட்டி சொல்லும் கதையில் நிகழும் வாட் சமரில், போரிடும் இருவரும் உயிருக்குப் பயந்து உணர்ச்சிகள் அலைக்கழிக்கப் போரிடுவதையும் காண்கிறோம்.
குரொசாவா தேர்ந்த ஓவியர். இப்படம் முழுவதும் ஒளியும், நிழலும் கவித்துமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. காட்டினுள், உச்சி வானில் ஒளிரும் கதிரவனை, மரங்களூடே நேராக காமெரா கொண்டு காட்டிக் கொண்டே செல்லும் காட்சி போன்று படம் முழுவதும் விரவிக்கிடகும் ஒளிப்பதிவு புதுமைகள். காட்டுக்குள் கண்ணாடிகொண்டு பிரதிபலிக்கப்பட்ட ஒளியைப் பயன்படுத்தி படமெடுக்கப்பட்டது. மௌன படங்கள் போல முற்றிலும் பிம்பங்களை கொண்டே குரொசாவா கதையைக் கொண்டு செல்கிறார். வசனங்கள் இரண்டாம் பட்சமாகின்றன.

புரிந்துகொள்ள முடியவில்லை என, ’ரஷோமோன்’ கதையின் கருத்தை தெளிவாக்குமாறு கேட்டுக் கொண்ட அவரது உதவி இயக்குநர்களுக்கு குரொசாவா சொன்னது: ’தங்களுடனும், பிறருடனும் நேர்மைமையாக இருப்பது என்பது மனிதர்களால் முடியாத காரியம். தங்களைப்பற்றியும், தாங்கள் அறிந்தவற்றைப் பற்றியும் அதிகமாக இட்டுக் கட்டி பெரிதாக்கிச் சொல்லாமல் மனிதர்களால் இருக்க முடியாது. இத்தகைய மனிதர்களைப் பற்றிய கதை இது. இப்பொய்கள் இவர்கள் தங்களைப் பெரியவர்கள் என நினைத்துக் கொள்ளச் செய்பவை. ’நான்’ எனும் ஆணவத்தைக் கொண்டு விரித்துக் காட்டப்படும் ஒரு விசித்திர ஓவியச் சுருளாக இப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.’

முடிவில், அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தையை தன் குழந்தைகளுடன் வளர்ப்பதற்காக மரம் வெட்டி அன்புடன் எடுத்துச் செல்வது, சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளாலும் மனமுடைந்து மனித குலத்தின் மீது நம்பிக்கை இழந்த மத குருவை வாழ்க்கையின் மீதும் மனிதர்களின் மீதும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச்செய்கிறது.ரஷோமோனுக்குப் பின் ஜப்பானிய திரைப்படங்களின் பக்கம் உலகின் கவனம் திரும்பியது. இக்ககதைப் பாணியை பின்பற்றி இன்றுவரை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன. ரஷொமோன் வெளிவந்து சில வ்ருடங்களில் இப்படத்தின் பாணியை பின்பற்றி, வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘அந்த நாள்’ தமிழ் நாட்டில் 1954 இல் வெளியானது.

அடுத்த படத்திற்காக குரொசோவா தாஸ்தோவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை தேர்ந்தெடுத்தார். தயாரிப்பாளர்களான ஷொச்சிக்கு ஸ்டுடியொவுக்கும் குரொசாவாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தன. நன்றாக எடுக்கப்பட்டிருந்த ’இடியட்’ துரதிர்ஷ்டவசமாக சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் குரொசாவாவின் அடுத்த படத்தைத் தயாரிக்க இருந்த டேயீ நிறுவனம் அதை ரத்து செய்தது. மனமுடைந்த குரொசாவா நடப்பது நடக்கட்டும் என மனைவியுடன் விடுமுறையை கழிக்க கடற்கரை பக்கம் சென்றுவிட்டார். வீடு திரும்பியபோது ரஷோமோன் வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற செய்தி அவருக்காக காத்திருந்தது,

ரஷோமோன் வெனிஸுக்கு அனுப்பட்டது குரொசாவாவுக்கு தெரியாது. ஜப்பானிய திரையுலகை சேர்ந்த சில முக்கியமானவர்களின் வற்புறுத்தலினால், டேயீ ஸ்டுடியோ தயக்கத்துடன் இப்படத்தை அனுப்பியிருந்தது. வெனிஸில் ’தங்க சிஙகம்’ விருது பெற்றபின் ரஷோமோன் உலக திரையரங்கின் சூடான விவாதப் பொருளானது. சிலர் புறக்கணிக்க, சிலர் எதிர் விமரிசனங்கள் எழுப்ப, இங்க்மர் பெர்க்மன் போன்ற ஐரோப்பிய இயக்குநர்களுடன் அமெரிக்க இயக்குநர்களும், முக்கிய விமரிச்கர்களும் இப்படத்தின் புதுமையை வியந்து பாராட்ட, குரொசவாவின் படைப்புகளுக்கு உலக திரையரங்கில் ஒரு வகையான எதிர்பார்ப்பு உருவானது.

குரொசவாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான ’இக்குரு’ – Ikuru (1952) தொஹோ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. முப்பது வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காது பணிக்கு சென்றுகொண்டிருக்கும் நகராட்சி அலுவலக அதிகாரி வாட்டானபேயின் கதை. மாற்றங்களின்றி தினசரி ஒரே ஒழுங்குடன் செல்லும் மந்தமான வாழ்க்கை. மனைவி இறந்தபின், மகனுடனும் நெருக்கமாக இல்லாது மனதளவில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். .

வயிற்று வலிக்கான மருத்துவ சோதனைகள் வயிற்றில் புற்று நோய் முற்றிய நிலையிலிருப்பதைத் தெரிவிக்க,. இன்னும் சில மாதங்களே உயிர்வாழ முடியும் என்பது தெரிய வருகிறது. சோதனை முடிந்தபின், கதிரவன் மறையும் காட்சியை அநுபவித்து காண்பவருக்கு மனது உறுத்துகிறது. அன்றுவரை தான் வாழ்க்கையை நிராகரித்து வாழ்ந்திருப்பதை வலியுடன் உணருகிறார். அவருடைய வாழ்க்கை அடியோடு மாறுகிறது.

மதுக்கூடத்தில் தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரை அன்றிரவு சந்திக்க, இருவரும் மது அருந்திக்கொண்டு காலைவரை சுற்றி அலைகின்றனர். உடன் பணிபுரியும் இளம் பெண்ணுடன் நட்பு கொண்டு அவளை வெளியே அழைத்துச் செல்கிறார். அனைத்துக்கும் மேலாக வாழ்வில் முதல் முறையாக பணிக்குச் செல்லாமல், மனம் விரும்பியபடி காலத்தைக் கழிக்கிறார். அலுவலகப் பணியில் அதுவரை அவர் கண்டுகொள்ளாமல் விட்ட, எழைகள் வாழும் குடியிருப்பில் பூங்கா அமைக்கப்படும் முயற்சிக்கு அனைத்து உதவிகளும் செய்து மன நிறைவோடு தன் இறுதி நாளைச் சந்திக்கிறார்.வாட்டானபே இறந்தபின், அவர் வீட்டில் நடக்கும் மது விருந்தில், அவரைப்பற்றி ஒருகாலத்தில் இகழ்ந்து பேசியவர் எல்லாம், இறுதி நாட்களில் அவரிடம் கண்ட மாற்றங்களையும், உறுதியுடன் அவர் பூங்கா திட்டத்தை பலத்த எதிர்ப்புகளூடே நிறைவேற்றியதையும் சேக்(Sake) மதுவின் தாக்கத்தில் நெகிழ்ந்து பேசிக்கொண்டிருக்க, நடந்தவற்றை ‘ஃப்ளாஷ்பேக்’ ஆக காண்கிறோம். ஒன்றுக்கும் உதவாதவர் என துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் வாட்டனாபே, துணிவுடன் மற்றவருக்கு நல்லது செய்தவராக இறுதியில் புகழப்படுகிறார். உயிர்வாழக் கிடைத்துள்ள நேரம் குறைவு என அறிந்த பின் அவருள் ஒரு மறுபிறப்பு நிகழ்கிறது.

குரொசாவாவின் படைப்புகளில் தனித்து நிற்கும் திரைப்படம். வாழ்க்கை, உயிர் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்பும் திரைப்படம். விறுவிறுப்பான காட்சிகளுக்கு இடமில்லாத சிக்கலான கதையை, தனது தனித்துவமான இயக்கத்தால் ஒரு நிமிடம் கூட தொய்வின்றி சொல்லப்படும் காவியமாக அளித்திருக்கிறார். தகாஷி சிமுரா, வட்டானபே பாத்திரமகவே மாறியிருக்கிறார். தான் கட்ட உதவிய பூங்காவின் ஊஞ்சலில் அமர்ந்து அசைந்துகொண்டு ’வாழ்க்கை குறுகியது’ என வாட்டானபே பாடிக்கொண்டிருக்கும் புகழ்பெற்ற காட்சியுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது....

பிரம்மாணடமான தயாரிப்பான ‘Seven Samurai’ 1954 இல் திரைக்கு வந்தது. பதினறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை. மலைப்புறத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயிகள் பாடுபட்டு விவசாயம் செய்து சேகரிக்கும் தானியங்களை அபகரித்துச் செல்லும் கொள்ளையரை முறியடிக்க முடிவு செய்கின்றனர். சாமுராய் வீரர்களைக் காவலுக்கு நியமிப்பதற்காக, சில விவசாயிகள் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று தேடி, காலில் விழாக்குறையாக கெஞ்சி ஒவ்வொரு சாமுராயாகச் சேர்த்து, இறுதியில் ஏழு சாமுராய்கள் கொண்ட குழுவுடன் ஊர் திரும்புகின்றனர்.சாமுராய்கள் அந்த கிராமத்தில் வாழ்வதும், கிராமத்தாருக்கு பயிற்சி கொடுத்து போராடி, கொள்ளையரை நிர்மூலமாக்குவதும் படத்தின் கதை. நான்கு சாமுராய்கள் இப்போராட்டங்களில் உயிரிழக்கின்றனர். காதல் கதை ஒன்று கிளைக் கதையாக சொல்லப்ப்டுகிரது. சாமுராய் வீரர்கள் கொள்ளையரை வெற்றிகரமாக முறியடிப்பதுடன், ஊரார் ஒன்று சேர்ந்தால் எவ்வித எதிர்ப்பையும் முறியடிக்க முடியும் எனபதை அந்த விவசாயிகளை உணரச் செய்கின்றனர்

படமெடுப்பதற்குப் புதிய உத்திகளையும் நுட்பங்களையும் குரொசாவா பயன்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பல கேமராக்கள் பயன் படுத்தப்பட்டன. வாட் போர், அம்பு எய்தல், குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ள முறை அனைத்தும் பிரமிப்பூட்டுபவை. இப்படத்தின் சணடைக்காட்சிகள் பற்றி இன்றும் சட்டகம் சட்டகமாக விவரிக்கப்பட்டு எழுதப்பட்டுக்கொண்டி ருக்கிறது.

ஸ்டுடியோவிலிருந்து வெகு தொலைவிலிருந்த மலைப்பகுதியில் முழுப்படப்ப்டிப்பும் நடந்தது. செலவு திட்டமிட்டிருந்ததை விட மிகவும் அதிகமாக, தொஹோ ஸ்டுடியோ குரோசாவவைக் கட்டுப்படுத்த முயன்றது. குரொசாவா ஒத்துக்கொள்ளவில்லை. நினைத்தபடியே படத்தை எடுத்து முடித்தார். இப்படத்திற்கான செலவால் தொஹோ ஸ்டுடியோ முடப்படும் நிலைக்கு வந்துவிட்டது எனச் சொல்லப்படுவதுண்டு.

‘Seven Samurai’ படம் வெற்றிப்படமாக அமைந்தது. உலகெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது. பரிசுகள் பாராட்டுகள் குவிந்தன. ஹாலிவுட் முதற்கொண்டு - (Magnificent Seven, Wild Bunch) - பல நாடுகளில் இப்படத்தை பின்பற்றி படங்கள். உருவாயின. டொனால்ட் ரிச்சி போன்ற விமரிசகர்கள் மிகச் சிறந்த உலகத் திரைப்படங்களில் ஒன்றாக இப்படத்தை குறிப்பிடுகின்றனர்.

ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’ நாடகத்தை குரொசாவா ஜப்பானிய ‘நோ’ (Noh) நாடகபாணியில் ‘Throne of Blood ‘ (1957) திரைப்படமாக உருவாக்கினார். ஜபபானிய சூழலுக்கு ஏற்ப, பதினாறாம் நூற்றாண்டில் நடப்பதாக அமைக்கப்பட்ட கதை. ஜப்பானிய சரித்திரத்தின் சோதனை மிகுந்த காலங்களில் ஒன்றான பதினாறாம் நூற்றாணடைச் சார்ந்த கதைகளையே பெரும்பாலும் குரொசாவா தனது சரித்திர திரைப்படங்களுக்கு பயன்படுத்தினார்.
கதாநாயகன் வஷிஸுவாக மிஃபூனேயும், தீய எண்ணங்களின் மொத்த உருவான மனைவி அஸ்ஸாஜியாக, இஸுசு யமதாவும் (ரஷோமொன் கதாநாயகி) நடிக்க, ஃப்யுஜி மலையில் அரங்கம் எழுப்பப்பட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டன. தொஹோ ஸ்டுடியோவிலும் ஃப்யூஜி மலையிலிருந்து கொண்டுவரப்ப்ட்ட கருத்த எரிமலை மண்ணைப் பயன்படுத்தி இதற்கான அரங்கம் உருவாக்கப்பட்டு படமெடுக்கப்ப்ட்டது.

தலைவனுக்காகப் போரிட்டு எதிரிகளை முறியடிக்கும் முக்கிய தளபதி வஷிஸு, தன் மாளிகைக்கு வந்து தங்கும் தலைவனை மனைவி அஸ்ஸாஜியின் ஆலோசனைப்படி கொன்று அடுத்த தலைவனாகிறான். குற்ற உணர்வு ஆக்கிரமித்து அலைக்கழிக்க, அடிக்கடி மன நிலை குலைந்து அலைமோதுகிறான். அஸ்ஸாஜியும் உளநிலை பதிக்கப்பட்டு தன் கைகளில் தலைவனின் ரத்தம் இருப்பதாகக் கற்பனை செய்து, அடிக்கடி கைகளைக் கழுவிக் கொண்டேயிருக்கிறாள்.

நடக்கப் போகும் நிகழ்வுகளை ஒரு ஆவி முன்பே சொல்லிவிடுகிறது. அதன் படி தனக்குப் பின் தன் நண்பனின் மகன் அரியாசனத்தைக் கைப்பற்றுவான் என அஞ்சும் வஷிஸு அவனைக் கொல்ல முயலுகிறான். இறுதியில் அவன் மாளிகையை எதிரிகள் முற்றுகையிடும் நேரம், தன் படைவீரர்களாலேயே கொல்லப்படுகிறான். காட்சியமைப்புகளின் பிரம்மாண்டம், நவீன உத்திகள், காமெரா கோணங்கள் – இவற்றுடன் மூடுபனியும் காற்றும் நிறைந்த கருப்பு நிற ஃப்யூஜி மலைப்பகுதியும் சிறப்பான நடிப்பும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
ஷேக்ஸ்பியர் நாடகத்தின் உள்ளடக்கத்தைக் கொண்ட புத்த அறவியல் புனைவாக இப்படத்தை குரசோவா உருவாக்கியிருக்கிறார். தற்பெருமையும், அகங்காரமும், நினத்ததை அடைந்தே தீரவேண்டுமெனும் பேராசையும் மனிதனை நிர்மூலமாக்கிவிடுவதை இப்படம் சொல்லுகிறது., சக்தி மிக்க தலவன் வஷிஸுவின் கோட்டையும் வீரர்களும் இருந்த இடம் இறுதியில், மயானமாக ஒரே ஒரு அடையளக்கல்லுடன் மூடுபனியிடையே தெரிவதைக் காண்கிறோம்.
தாஸ்தோவ்ஸ்கியின் ‘The Lower Depths’ நாவல் ‘டொஷென்க்கோ’ திரைப்படமாகப் பரிணமித்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னான ‘எடோ’ காலத்தில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்க்கையைப் பதிவுசெய்வதாக இப்படத்தை குரொசாவா அமைத்தார். அந்தக் காலத்திற்கேற்ப அரங்கமும், பாத்திரங்களுக்கான ஆடைகளும் அமைக்கப்பட்டன.

நாற்பது நாட்கள் தொடர்ந்த ஒத்திகைக்குப் பிறகு நேரடியாகப் படப்பிடிப்பு நடந்தது. மிஃபூனே, இசுசு யமதாவுடன் குரொசாவா படங்களின் வழக்கமான நடிகர் குழாத்திலிருப்போர் நடித்தனர். திருடர், நோயுற்றோர், முதியவர், சூதாடிகள் தங்கும் கொட்டடி போன்ற விடுதி. அதன் உரிமையாளன் கறாரானவன். அவன் மனைவிக்கும் அவள் சகோதரிக்கும் அங்குள்ள ஒரு திருடன் மேல் ஆசை. சிரிப்பும் ஏளனமுமாகப் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் அங்கு தங்கும் ஒரு நடிகனின் தற்கொலையுடன் முடிகிறது.

தாஸ்தோவ்ஸ்கியின் இந்தக்கதை பிரெஞ்சு இயக்குநர் ழான் ரென்வரால் 1936 இல் படமக்கப்பட்டிருந்தது. இரண்டு திரைப்படங்களும் கட்டாயம் பார்க்கப்பட வேண்டியவை. ரென்வாரை பின்னாளில் குரொசாவா நேரில் சந்தித்தார். இப்படம் வெளியான நேரத்தில் குரொசாவாவுக்கு லண்டனில் விட்டோரியோ டி சிகா, ஜாண் ஃபோர்ட், ரெனெ க்ளேய்ர் ஆகியோருடன் நடந்த பாராட்டு விழாவில் “Throne of Blood” படத்திற்கு விருது அளிக்கப்பட்டது.

1958 இல் குரொசாவவின் ‘The Hidden Fortress’ வெளியனது. ஃப்யூஜி மலையின் அடிவாரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. உள்நாட்டுப் போர்கள் நிறைந்திருந்த காலத்தில், நாடிழந்த ஒரு இளவரசி, அவள் அரசவையைச் சேர்ந்த ஒருசிலருடன் மலைப்பகுதியில் எதிரிகளிடமிருந்து மறைந்து தங்கியிருக்கிறாள். அவளைப் பாதுகாக்கும் தளபதியாக மிஃபூனே நடித்திருக்கிறார்.
போர்க்களங்களில் கொல்லப்பட்டவர்களின் உடமைகளைத் திருடி வாழும் வேலையற்ற இரு விவ்சாயிகள், இளவரசியிடமிருக்கும் தங்கத்தைத் திருடமுயன்று தோல்வியுறுகின்றனர். அவர்களைக் கொண்டே அந்தத் தங்கத்தை இளவரசியும் தளபதியும் எதிரியின் சோதனைச் சாவடிகள் வழியே கடத்தி எடுத்துச் செல்கின்றனர். இறுதியில் இழந்த நாடு மீட்கப்பட, இளவரசி அரசியாகிறாள் சன்மானங்களுடன் விவசாயிகள் இருவரும் ஊர் திரும்புகின்றனர்.

படத்தில் காட்டப்படும் தீ விழாவும், அடிமைகளின் கலவரமும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப் பட்டிருப்பவை. குரொசாவாவின் மிகப் பெரிய வெற்றிப்படங்களில் இப்படம் ஒன்று. அவரின் முதல் ’அகலத் திரை’ (Wide Screen ) திரைப்படமும் ஆகும்.

குரொசாவா முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். 1960க்கு முன்பு வரை இந்த மேதையின் உருவாக்கத்தில் வெளியான திரைப்படங்களைப் பற்றி இங்கு கண்டோம். அறுபதுகளுக்க்ப் பின் குரொசாவா இயக்கிய திரைப்படங்கள், அவரது வாழ்க்கை , கலை பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.
அகிரா குரொசாவா - பகுதி இரண்டு


(தொடரும்)

1 comment:

Senthil said...

Thanks for a great post!