Monday 23 November 2009

மசாகி கோபயாஷி - திரைப்படத்தின் உன்னதக் கலைஞன் - 2

எஸ்.ஆனந்த்


திரை மேதை மசாகி கோபயாஷியின் ஒப்பற்ற திரைக் காவியமான ‘ஹ்யூமன் கண்டிஷன்' உலகளவில் இதுவரை வெளிவந்துள்ள முப்படத் தொகுப்புகளில் (Trilogy) மிக முக்கியமானதாகவும், மிகச்சிறப்பானதாகவும் கருதப்படுவது. ிமரிசகர்களால் மனிதத்துவத்தின் இறுதிக் காவியம் எனப் புகழப்பட்டது. ஜப்பானிய நாவலசிரியர் ஜீம்ப்பெய் கோமிகாவா எழுதிய ஆறு பகுதி நாவலான ‘ஹ்யுமன் கண்டிஷனை' கோபயாஷி மூன்று திரைப்படங்களாக இயக்கி அளித்துள்ளார்.

‘கருப்பு நதி'(1957)க்கு அடுத்து, கோபயாஷியின் இயக்கத்தில் 1959இலிருந்து மூன்று வருடங்களில் தயாரிக்கப்பட்ட இம் முப்படத் தொகுப்பின் ஒவ்வொரு படமும், சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று திரைப்படங்களும் சேர்ந்த தொகுப்பின் மொத்த நேரம், 579 நிமிடங்கள் - ஒன்பது மணி, முப்பத்தொன்பது நிமிடங்கள். தனி வெளியீடுகளாகத் திரையிடப்பட்ட இத்திரைப்படங்கள் பின்னர் உலகெங்கும் திரைப்பட விழாக்களிலும், திரையிடல்களிலும் மொத்தத் தொகுப்பாகத் திரையிடப்பட்டன.

ஹ்யூமன் கண்டிஷன், இரண்டாவது உலகப்போர் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டது. 1890 வரை கீழை ஆசிய நாடுகளில் ராணுவ பலத்தில் முதலிடத்தைச் சீனா பெற்றிருந்தது. கொரிய நாட்டைத் தன் வயப்படுத்துவற்காக ஜப்பானுடன் நடந்த போரில் சீனாவின் மேனிலை சீர்குலைந்தது. 1894 இலிருந்து 1895 வரை நடைபெற்ற முதல் சீன - ஜப்பானியப் போரில், காலாவதியான போர்க் கருவிகளைக் கொண்ட சீன ராணுவத்தை, அமெரிக்க உதவியுடன் நவீன மயமாக்கப்படிருந்த ஜப்பானிய ராணுவம் வென்றது. இப்போருக்குப் பின் ஜப்பான் , கிழக்கு ஆசிய நாடுகளில் முதலிடத்தைப் பெற்றது.

ஊழலும் ஒழுங்கின்மையும் சீன அரசின் பலத்தைத் தளர்வடையச் செய்தது மட்டுமின்றி, ஆண்டுகொண்டிருந்த க்வின் அரச பரம்பரைக்கு எதிராக மக்களின் கிளர்ச்சியை அதிகரிக்கச் செய்தன. 1911 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மக்கள் புரட்சி க்வின் பரம்பரை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவும் மோசமான நிலையை அடைந்தது. 1894 இலிருந்து 1945 வரை ஜப்பான் சீனாமீது ஏவி விட்ட வன்முறைகளும் ஆக்கிரமிப்புகளும் கணக்கிலடங்கா. இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளால் ஜப்பான் தோற்கடிக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது. இன்றுவரை சீன மக்களால் இந்த வலிகளின் நினைவுகளிலிருந்து மீள முடியவில்லை. ஹ்யூமன் கண்டிஷன், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் இறுதி நாட்களில் மஞ்சூரியப் பகுதியில் வாழ்ந்த ஜப்பானியனான காஜியின் கதை.

‘ஹ்யூமன் கண்டிஷன்' எனும் தலைப்பின் தத்துவார்த்தமான அர்த்தம் இத்திரைப்படத்திற்கு முற்றிலும் பொருத்தமானது. மனித வாழ்வின் குரூரமான யதார்த்த நிலைகள் இதில் ஆழமாகப் பதிவு செய்யப்படிருக்கின்றன. போரையும் வன்முறையையும் வெறுக்கும் கதாநாயகன் காஜியின் பாத்திரத்தைத் தத்ரூபமாக நம்முன் நிறுத்துகிறார் நடிகர் தத்சுயா நகதாய்.

ஹ்யூமன் கண்டிஷன் - முதல் பகுதி No Greater Love (1959)
காஜியின் காதலி மிச்சிகோ திருமணத்திற்கு வற்புறுத்திக்கொண்டிருகிறாள். காஜி , கட்டாய ராணுவப் பணிக்கான அழைப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான்.1943ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம். காஜிக்கு, அவன் பணியாற்றும் நிறுவனம் ஒரு சலுகை அளிக்கிறது. நிறுவனத்தின் சுரங்கத் தொழிலாளர் நிர்வாகியாகப் பணியை ஏற்றால் கட்டாய ராணுவப் பணியிலிருந்து விலக்குப் பெறலாம். சுரங்கம் இருக்குமிடம் மஞ்சூரியாவின் மிக மோசமான பகுதி. காஜி தான் காதலித்து மணம்புரிந்த மிச்சிகோவுடன் சுரங்கமிருக்கும் சிற்றூருக்குப் போய்ப் பணியில் சேருகிறான். பத்தாயிரம் சீனத் தொழிலாளர்களுக்கு மேல் அங்கு பணி புரிகின்றனர்.

சீனக் கூலித் தொழிலாளர்களைக் கொண்டுவரும் தரகர் வேலையில் சில சுரங்க மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அத்துடன் அதிக வட்டிக்குக் கடனளித்து, சீனர்களைக் கொத்தடிமைகளாக வதைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒகாசாகி இவர்களில் கொடூரமானவன். சுரங்கத்தில் தொழிலாளர் பற்றாக்குறை வேறு. தொழிலாளரை அடித்து அதிக வேலை வாங்குவதைக் காஜி எதிர்க்கிறான். தொழிலாளர்கள் நன்றாக நடத்தப்பட வற்புறுத்தும் காஜிக்கு, சக அதிகாரி ஒகிஷிமா தவிர மற்ற அனைவரிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்புகிறது. கீழே பணியாற்றும் மேற்பார்வையாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காஜி மிரட்டப் படுகிறான்.
ஜப்பானிய ராணுவம் திடீரென அறுநூறு சீனக் கைதிகளைச் சுரங்க வேலைக்கு அனுப்பிவைக்கிறது. விலங்குகளைப் போல சரக்கு ரயில் வண்டியில் கொண்டுவந்து இறக்கப்படும் இவர்கள் மின்வேலியிட்ட கைதி முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். காஜி இவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்துகிறான். சுரங்கத்தில் ஒகாசாகி தாக்கியதில் இக்கைதிகளில் ஒருவன் உயிரிழக்க, பிரச்சினை ஆரம்பிக்கிறது. சுரங்கத் தொழிலாளர்களுக்காக ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அறுபது பாலியல் தொழிலாளர்களுக்கும் காஜிதான் அதிகாரி. சீனக் கைதிகளை உற்சாகப்படுத்த இவர்களில் முப்பது பெண்கள் சீனக் கைதி முகாமுக்கு அனுப்பப்படுகின்றனர். சுங் லாங் என்ற பெண்ணும், சீனக் கைதி கேயோவும் காதல் வயப்படுகின்றனர்.

ரேஷன் மாவைத் திருடியதற்காகக் தண்டிக்கப்பட்டு காஜியின் மீது கோபத்துடன் இருக்கும் சீன உதவியாளன் ஸென்னை, காஜியால் பணியிழந்த தரகர் இருவர் பயன் படுத்திக்கொள்கின்றனர். மின் இணைப்புக்குப் பொறுப்பாளியான ஸென்னின் நண்பன் மூலம், சீனக் கைதி முகாமின் மின்இணைப்பு சில நிமிடங்கள் துண்டிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தப்பிவிடும் சீனக் கைதிகளை வேறு இடங்களுக்கு விற்றுவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ராணுவ அதிகாரியால், காஜி மிகக் கடுமையாக எச்சரிக்கப்படுகிறான்.
கைதிகளாக சுரங்கப் பணி செய்துகொண்டிருப்பவர்கள் சாதாரண சீன மக்கள். காஜி இவர்களுடன் சுமுகமான உறவை நாடுகிறான். சுரங்க நிர்வாகம் உற்பத்தியில் முன்னேற்றம் காண்கிறது. மூன்று நாள் விடுப்பில் காஜி மனைவியுடன் மகிழ்ச்சியாக ஊருக்குப் புறப்படும் நேரத்தில் இரண்டாவது முறையாக சீனக் கைகிதிகள் சிலர் தப்பித்து விடுகின்றனர். ராணுவத்திற்குத் தெரிவிக்காமல் இச்சம்பவம் மறைக்கப்படுகிறது.

உதவியாளன் ஸென்னைச் சந்தேகப்படும் காஜி, அவனை மறைமுகமாக எச்சரிக்கிறான். மூன்றாவது முறை கைதிகள் தப்பிக்கும் முயற்சிக்கு ஸென் துணைபோக மறுக்க, இம்முறை தப்பிக்க இருந்த சிலர் விவரம் தெரியாமல் மின்வேலியில் சிக்கி இறக்கிறார்கள். தன்னைப் பிடிப்பதற்காக, மேலதிகாரிக்குத் தெரிந்தே இத்தப்பிக்கும் முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டதை அறியும் ஸென்னும் தண்டனைக்குப் பயந்து வேலியின் மின்கம்பிகள் மேல் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள, நிலைமை மோசமாகிறது.தப்பிக்க இனி வழியில்லை என அறியும் சீனக் கைதிகள் சிலர் பணிக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் நேரம் மேற்பார்வையாளனைத் தாக்கிவிட்டு தப்பித்து ஓட, காவலர்களால் பிடிக்கப்பட்டு விடுகிறார்கள். ராணுவ அதிகாரிகள் வந்து சேருகிறார்கள். சீனக் கைதிகள் தப்பியோடுவதைத் தடுக்க, கடுமையான தண்டனை தேவை என்பது ராணுவ அதிகாரிகளின் முடிவு. அனைவரும் பார்க்க, பிடிபட்ட சீனர்களைச் சிரச்சேதம் செய்ய முடிவாகிறது.

காஜி தலைமை அலுவலகம் வரை முறையிட்டும் இத்தண்டனையை நிறுத்த முடியவில்லை. காஜியின் மீது கோபம் கொண்ட ராணுவ அதிகாரியால், தண்டனைக்குச் சாட்சியாக அவன் நிறுத்தப்படுகிறான். அனைத்து சீனக் கைதிகளும் காண, ராணுவ அதிகாரியின் வாள் இருவரின் தலைகளைச் சீவி எறிகிறது. மூன்றாவதாக, சீனப் பெண் சுங் லாங்கின் காதலனான கேயோ மிகக் குரூரமான முறையில் கொல்லப்படுகிறான். காஜி ஆத்திரத்துடன் தலையிடுகிறான். சீனக் கைதிகள் கொதித்தெழ, வேறு வழியின்றி தண்டனையை அத்துடன் நிறுத்த ஆணையிடப்படுகிறது.

ராணுவ அதிகாரியின் கோபம் உச்சத்தை எட்டுகிறது. காஜி சிறைவைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாகிறான். சீனர்கள் தப்பிக்க உதவியதாக ஒத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். மறுக்கும் காஜியை ஒன்றும் செய்ய இயலாமல் விடுதலை செய்துவிடுகிறார்கள்.பணிக்குத் திரும்பும் காஜிக்கு கட்டாய அவசர சேவைக்கான ராணுவ அழைப்பு காத்திருக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் ராணுவ முகாமில் இருக்க வேண்டும். வழியில் சந்திக்கும் மனைவியுடன் காஜி வீடு நோக்கிச் செல்வதுடன் ஹ்யூமன் கண்டிஷனின் முதல் பாகம் முற்றுப்பெறுகிறது.

போர்க்கால உலகத்தை இதில் நேரில் காணுகிறோம். ராணுவ உத்தரவுகளைக் குடிமக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். தனிமனித சுதந்திரம் என்று ஒன்று அறவே இல்லை. இந்த முதல் பாகத்தில் காட்டப்படும் இரண்டு மூன்று ராணுவ அதிகாரிகள், மொத்த ராணுவத்தின் அதிகார வன்முறையையும் கட்டுப்பாட்டையும் நம்மை உணரச் செய்கிறார்கள். கைதிகள் தப்பி ஓடியபின், அதற்கு விளக்கம் சொல்ல முயலும் அதிகாரி ஒகிஷிமா, ராணுவ அதிகாரியால் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறான்.

சீனர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப் படுகின்றனர்; சரக்கு ரயிலில் சீனக்கைதிகள் கொண்டுவரப்பட்டு இறக்கப்படும் காட்சி ஒன்று போதும். சீனக் கைதிகளைச் சிரச்சேதம் செய்யும் முன் ராணுவ அதிகாரி தன் வாளைத் தண்ணீரால் நனைத்துக்கொள்கிறான். தலையை வெட்டும் போது கொழுப்பு வாளில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக அப்படிச் செய்வதாகச் அவன் சொல்லும்போது நாம் உறைந்து போகிறோம். மூன்றாவது கைதியின் தலையைக் கொய்ய உதவியாளன் வாளை வீசும் போது அக் கைதி எழுந்து நின்று எதிர்க்க, வாளால் சின்னா பின்னமாக்கப்படுகிறான். கோபயாஷி இக்காட்சிகளை ஒரு நொடி கூடத் தேவைக்கு அதிகமாகக் காட்டுவதில்லை. அப்படிக் காட்டி பார்ப்பவரின் இரக்க உணர்வைத் தூண்டிப் பரிதாபப்பட வைப்பதில்லை. டாரண்டினோவின் ‘கில் பில்' , ‘ரிசர்வாயர் டாக்ஸ்' போன்ற படங்களின் (இவற்றைவிட அதிக வன்முறை உள்ள படங்கள் நிறைய உண்டு. ஹாலிவுட்டில் சாம்பெக்கின்பா தான் குரூர வன்முறைக் காட்சிகளுக்கு முன்னோடி) ரத்தக்களரியான காட்சிகளைக் கண்களால் காண முடியாத எனக்குக் கோபயாஷியின் ஹரகிரியும், ஹ்யூமன் கண்டிஷனும் அம்மாதிரியான நிலையை ஒருபோதும் அளிக்கவில்லை.
சுரங்கம் அமைந்துள்ள மஞ்சூரியாவின் பரந்த வெளிப் பகுதிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. இறுக்கமான காட்சிகள் நம்மைக் காஜியின் மனநிலைக்குக் கொண்டுசெல்கின்றன. காஜியின் மனிதாபிமான உணர்வு பலமுறை சோதனைக்குள்ளாகிறது. ஒவ்வொரு முறையும் காஜி அடி வாங்குகிறான். காஜியின் முயற்சியால் உற்பத்தி விகிதம் பெருகுவதை ஏற்றுக்கொள்ளும் நிர்வாகத்தால், அவனது மனிதாபிமான நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சீனர்களுக்காகப் பேசும் ஒரே ஜப்பானியக் குரல் காஜியுடையது. இறுதியில், சீனக் கைதிகளின் சிரச்சேதத்திற்குப்பின் சீனர்களும் காஜியை இகழ்ந்து காறித் துப்புகின்றனர். இவை அனைத்தையும் மீறி, வாழ்க்கையின் மீதும் மனிதர் மீதும் காஜி கொண்டுள்ள நம்பிக்கை சிறிது கூடக் குறைவதில்லை.

ஹ்யூமன் கண்டிஷன் - இரண்டாவது பாகம்
The Road to Eternity (1959)

மஞ்சூரியாவிலுள்ள ஜப்பானிய ராணுவப் பயிற்சி முகாமில் காஜியின் ராணுவ வாழ்க்கை ஆரம்பிக்கிறது. பயிற்சிகளில் சிறப்பாக விளங்குகிறான். கட்டாய ராணுவச் சேவைக்காக வந்துள்ள கடைநிலைப் பயிற்சி வீரர்களும் அவர்களுக்கு ஒருபடி மேல் நிலையிலிருக்கும் வீரர்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரப் படிநிலை முறை (Hierarchy) ஆழமாக வேரூன்றியிருக்ககும் ராணுவத்தில், மேல்நிலை வீரன் தனக்கடுத்த நிலையிலுள்ளவனிடம் செலுத்தும் அதிகார வன்முறை காஜிக்கு அதிர்ச்சியளிக்கிறது. மேலதிகாரிகளால் எதற்கெடுத்தாலும் அடித்துத் தாக்கப்படுவது சில நாட்களில் காஜிக்கும் அவனுடன் புதிதாகப் பயிற்சி பெறுகிறவர்களுக்கும் பழக்கமாகிவிடுகிறது.காஜியும், அதே அறையில் தங்கும் ஒத்த கருத்துள்ள மேல் நிலை வீரன் ஷிஞ்ஜோவும் நண்பர்களாகின்றனர். பயிற்சி முகாமிருக்கும் மஞ்சூரியப் பகுதியின் எல்லை தாண்டியதும் உள்ள ரஷ்யப் பகுதிக்கு ஓடிவிட முடிவு செய்யும் ஷிஞ்ஜோ, காஜியையும் உடன் வர அழைக்கிறான். சோசலிச ஆட்சி நடக்கும் ரஷ்யாவின் மேல் ஷிஞ்ஜோவுக்கு அப்படி ஒரு மோகம். காஜி மறுத்துவிடுகிறான். ராணுவத்தின் மனிதாபிமானமற்ற போக்கை உள்ளிருந்தே போராடி மாற்ற வேண்டும் என்பது காஜியின் நிலைப்பாடு. எதிர்பாராவிதமாக காஜியின் மனைவி மிச்சிகோ அங்கு வர, ஒரு இரவு காஜி அவளுடன் தனியாகத் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. போரில் சாகாமல் அவளுக்காகத் திரும்பி வருவேனென்று காஜி உறுதியளிக்கிறான்.

காஜியுடன் பயிற்சி பெறும் ஒபாரா மனக்குழப்பத்திலிருப்பவன். அனைத்துப் பயிற்சிகளிலும் தவறிழைக்கிறான். ஒவ்வொரு முறையும் அதற்காகத் தண்டிக்கப் படுகிறான். ஒரு நீண்ட நடைப் பயணப் பயிற்சியில் ஒபாரா முடியாமல் விழுந்துவிட, பயிற்சி அதிகாரி அனைவர் முன்பும் அவனை மிக மோசமாகப் பேசித் தாக்குகிறார். இரவில் அவனிருக்கும் அறையிலுள்ள மேல்நிலை வீரர்கள் அவனை அடித்து அளவுக்கு மீறி அவமானப்படுத்துகின்றனர். மனமுடைந்த ஒபாரா அன்றிரவு கழிப்பறையில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு மாய்த்துக் கொள்கிறான். ராணுவ மேலிடத்தில் இந்தத் தற்கொலை மிகுந்த அவமானத்துக்குரியதாகக் கணிக்கப்படுகிறது. எந்த மரியாதையுமில்லாமல் ஒபாராவின் உடல் கிடத்தப்பட்டு, அதனைச் சுற்றி சக பயிற்சியாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. தற்கொலை செய்யுமளவு ஒபாராவை அவமானப்படுத்திய மேல்நிலை வீரன் யோஷிதாவைத் தண்டிக்க வேண்டுமென முகாம் தலைவனிடம் காஜி முறையிடுவது பயனற்றுப்போகிறது. அவ்வாறு புகார் செய்வது தவறு என அதிகாரி காஜியை அடித்து வெளியேற்றுகிறான். இரக்கமோ மனித உணர்வுகளோ துளியளவு கூட இல்லாத ராணுவக் கண்டிப்பும் விதிமுறைகளும் காஜியின் மனதை மிகவும் புண்படுத்துகின்றன.

பயிற்சி முகாமைச் சுற்றிப் பரவிய காட்டுத்தீயை அணைக்க அனைவரும் ஓடும்போது ஷிஞ்ஜோ முகாமிலிருந்து தப்பி ஓடிவிடுகிறான். அவனைப் பிடிக்க ஓடும் யோஷிதாவைக் காஜி பின்தொடர, இருவரும் வழியிலுள்ள புதைகுழியில் விழுந்துவிடுகின்றனர். ஷிஞ்ஜோ தப்பி விடுகிறான். சிகிச்சைக்காக காஜியை மருத்துவப்பிரிவில் சேர்க்கிறார்கள். அங்கும் கடுமையாக வலியுறுத்தப்படும் ராணுவ சட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நலமான பின், மருத்துவப் பிரிவில் பணியாற்றும் காஜி, பணி நேரத்தில் சக செவிலிப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததற்குத் தண்டனையாக போர்முனை முகாமுக்கு மாற்றப்படுகிறான். பயிற்சி முகாம் நண்பனான காகேயாமா, இங்கு காஜியின் பிரிவுக்கு மேலதிகாரி. காஜியை உதவியாளனாக அமர்த்திக்கொள்கிறான். காஜியின் முயற்சியால் புதிதாக வருபவர்கள் தங்கத் தனி இடம் கொடுக்கப்படுகிறது. பலர் நாற்பது வயதைக் கடந்தவர்கள். காஜி மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறான். இதனால் கோபமடையும் மூத்த படைவீரர்கள் காஜியைப் பலமுறை அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

மூத்த படைவீரனால் புதிய வீரனொருவன் அவமதிக்கப்பட்டுத் தாக்கப்படும் போது சண்டை மூள, காஜி மீண்டும் மிக மோசமகத் தண்டிக்கப்படுகிறான். அதுவரை பொறுமையாக இருந்த காஜி அருகிலிருந்த வாளை எடுத்து பதில் தாக்குதலுக்குத் தயாராக அத்துடன் சண்டை நிறுத்தப்படுகிறது. தண்டனையாக, காஜியின் அணியினர் அனைவரும் ரஷ்ய எல்லைப் போர்முனையில் பதுங்கு குழி தோண்டும் பணிக்கு அனுப்பப் படுகின்றனர். ரஷ்யப் படைகள் முன்னேறி வந்துகொண்டிருக்கின்றன.

அமெரிக்க ஜனதிபதி ரூஸ்வெல்ட் ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பதும், ஜெர்மனி சரணடைந்துவிட்டதும் தெரிய வருகிறது. இருந்தாலும் ஜப்பானிய ராணுவ மேலிடம் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எதிரிகளை நிர்மூலமாக்குவோம் அல்லது செத்து மடிவோம் என வீரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். நேசப்படைகளின் விமானம் பறப்பதைக் கண்டபின்னரே அனைவருக்கும் நிலைமை புரிகிறது. காஜியும் மற்ற வீரர்களும் ரஷ்ய எல்லைப்பகுதியை அடைகின்றனர். அவர்கள் விட்டுச் சென்ற முகாம் விமானக் குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்படுகிறது.
ரஷ்ய எல்லையில், பணியில் ஈடுபட்டிருக்கும் காஜியும் மற்றவர்களும் ரஷ்ய டாங்குகள் முன்னேறி வருவதைக் காண்கிறார்கள். அனைவரும் பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்டு துப்பாக்கிகளால் சுட, உக்கிரமான ரஷ்ய ராணுவத் தாக்குதல் ஆரம்பிக்கிறது. தாக்குதல்களில் பலர் உயிரிழக்கின்றனர். காஜியுடன் ஓரிருவரே உயிர் பிழைக்கின்றனர். காஜி இருளில் தப்பி ஓட, இரண்டாவது பாகம் முடிவடைகிறது. இப்படமும், மூன்றாவது படமும் முழுக்க கோபயாஷியின் ராணுவ அனுபவங்களைப் பிரதிபலிப்பவை. ஜப்பானிய ராணுவத்தில் நிலவிய வன்முறை அப்படியே காட்டப்பட்டுள்ளது. சாமுராய் வாள் வன்முறையின் குறியீடாகிறது. அதிகாரிகள் சாமுராய் வாட்களை வைத்துள்ளனர். பயிற்சிமுகாமின் மேலதிகாரி எப்போதும் தன் வாளைத் துடைத்து மெருகேற்றிக்கொண்டிருக்கிறார். மருத்துவமனையை நிர்வகிக்கும் தலைமை ராணுவத் தாதியான பெண் கூட கீழ்நிலை வீரனை அடித்த பின்பே பேச ஆரம்பிக்கிறாள். 1860திலேயே ஜப்பானிய ராணுவம் அமெரிக்க உதவியால் நவீனமயமாக்கப்பட்டது. அமெரிக்க முகாம்களின் ராணுவப் பயிற்சி முறைகளை ஒத்த பயிற்சிக் காட்சிகளை இங்கு காண்கிறோம்.

ராணுவப் பயிற்சி முகாமில் நடப்பவையாகக் காட்டப்படும் கதையின் ஒரு பகுதி, பின்னர் 1970 இல் வெளிவந்த ‘Full Metal Jacket‘ திரைப்படத்தில் ஸ்டான்லி குப்ரிக்கால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஹ்யூமன் கண்டிஷனில் தற்கொலை செய்து கொள்ளும் பயிற்சி வீரன் ஒபாரா போல, குப்ரிக்கின் படத்தில் சக பயிற்சியாளராலும், பயிற்சி அதிகாரியாலும் பலமுறை தண்டிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் ‘காமர் பைல்' என்றழைக்கப்படும் பயிற்சி வீரன், ஓர் இரவில் கழிப்பறையில் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்துகொள்கிறான். அதற்கு முன் தன்னைக் கொடுமைப்படுத்திய பயிற்சியாளனையும் சுட்டுக் கொன்று விடுகிறான்.

படம் முழுவதும் ஒளிப்பதிவு கதையின் ஆழத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. பல காட்சிகளைச் சொல்லலாம். ராணுவ முகாமில் காஜி மனைவியுடன் இருக்கும் இரவுக் காட்சிககளில் ஒளிப்பதிவின் தரம் உச்சத்தை எட்டுகிறது. நிபந்தனையற்ற கீழ்ப்படிதலும், உடல் ரீதியான தண்டனைகளும் ஜப்பனிய ரானுவத்திலிருப்போரை மனித உணர்வுகள் முற்றிலும் அற்றவர்களாக மாற்றியிருப்பதைக் காண்கிறோம். காஜிக்கு சோதனைகள் வந்து கொண்டே யிருக்கின்றன.ஆனால் எந்நேரத்திலும் உரிமைக்கும் நியாயத்துக்கும் குரல் கொடுப்பதை அவன் நிறுத்துவதில்லை.

ஹ்யூமன் கண்டிஷன் -மூன்றாவது பாகம் A Soldier's Prayer (1961)
1945. ரஷ்ய ராணுவம் முன்னேறி வந்துகொண்டிருக்கிறது. ரஷ்யத் தாக்குதலில் காஜியின் படைப்பகுதி நிர்மூலமாக்கப்பட்டு, காஜி தன்னுடன் உயிர் தப்பிய இரு ஜப்பானிய வீரருடன் அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். வழியில் ஆட்கள் யாருமற்ற தானியக் கூடமொன்றிலிருந்து வேண்டிய அளவு அரிசியை எடுத்துக்கொண்டு தெற்கு மஞ்சூரியா நோக்கிப் பயணத்தைத் தொடருகிறார்கள்.
வழி தெரியமல் இரண்டு நாட்கள் நடந்தபின், அடர்ந்த காட்டுப்பகுதியை அடைகின்றனர். சில ஜப்பானியக் குடும்பங்கள் அங்கு ஒளிந்திருக்கின்றன. அனைவரும் இணைந்து காட்டைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். உணவுக்கு கடுமையான தட்டுப்பாடு. ஒரு குழந்தை முதலில் இறந்துவிடுகிறது. பசிக் கொடுமை தாங்காது சிலர் தற்கொலை செய்தும் , விஷக் காளன்களை உண்டும் இறந்து விடுகிறார்கள். இறுதியில் காஜியையும் மற்ற இரு வீரர்களையும் தவிர , வழியில் சேர்ந்துகொண்ட பெண் ஒருத்தி மட்டும் மிஞ்சுகிறாள். அவளும் பின்னர் வழியில் சுடப்பட்டு இறக்க, எஞ்சிய வீரர்கள் காஜியுடன் பயணத்தைத் தொடர்கின்றனர். தப்பித்து வரும் பழைய பயிற்சித் தோழன் தாங்கே, வழியில் காஜியுடன் சேர்ந்து கொள்கிறான்.

ஒரு ஜப்பானிய ராணுவ முகாம் வழியில் தென்படுகிறது. ஜப்பானின் தோல்வி பற்றி அறிந்த பின்னும் பழைய மிடுக்குடன் இருக்கும் முகாம் தலைவன் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறான். அங்கிருந்து காஜியுடன் தப்பித்துச் செல்ல விரும்பிய இரு படை வீரர்கள், காஜியின் கண்முன்னே வாளால் கொல்லப்படுகின்றனர். வாளால் வெட்டிய ஜப்பானிய உதவி அதிகாரியைச் சுட்டுக் கொன்றுவிட்டு காஜியின் குழு பயணத்தைத் தொடருகிறது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த சீனர்களின் தற்காப்புப் படை அவர்களைச் சுற்றி வளைக்கிறது. அச்சமயம் அருகில் ஒளிந்திருந்த ஜப்பானிய வீரர் குழு ஒன்று காஜியின் குழுவுடன் சேர்ந்து கொள்கிறது.
அனைவரும் அச் சீனர்களிடமிருந்து தப்பி வழியிலுள்ள குடியிருப்பு ஒன்றை அடைகின்றனர். பல பெண்கள் அங்கிருக்கின்றனர். ரஷ்ய ராணுவத்தினர் அப் பெண்களிடம் அடிக்கடி வந்து போவதாகக் காஜி அறிகிறான். காஜியுடனிருப்போர் அனைவரும் ஆளுக்கொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அப்பெண்களின் விருப்பப்படி, ராணுவ அடையாளத்தை விட்டுவிட்டு சாதாரணக் குடிமக்களாக அவர்களுடன் வாழ முடிவு செய்கின்றனர். காஜி மட்டும் பயணத்தைத் தொடரத் தயாராகிறான். வழக்கமாக அங்கு வரும் ரஷ்ய ராணுவப் பிரிவு அந்நேரம் வந்துவிட, அனைவரும் தாக்குதலுக்குத் தயாராகின்றனர். அப்பெண்களின் தலைவி குறுக்கே வந்து தடுக்கிறாள். வேறு வழியின்றி காஜியுடன் அனைவரும் சரணடைய வேண்டியதாகிறது. ரஷ்யக் கைதி முகாமுக்கு அனுப்பப்படுகின்றனர்.
ராணுவம் எங்கும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. ரஷ்ய ராணுவத்தினர் கனிவாக இருப்பதைப் போலத் தோன்றினாலும், ராணுவ விதிமுறைகளில் இங்கும் பெரிய வித்தியாசமில்லை. ரஷ்ய மொழி தெரிந்த சில ஜப்பானிய வீரர்கள் மேற்பர்வையாளராக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களால் ஜப்பானிய ராணுவ வன்முறை இங்கும் பின்பற்றப்படுகிறது. எதற்கெடுத்தலும் அடியும் உதையும். தாங்கொண்ணாக் குளிர். காஜி அங்குள்ள பழைய சாக்குகளைக் கிழித்து உடையாகப் பயன்படுத்துகிறான். மிகக் குறைவான உணவே அளிக்கப்படுகிறது. காஜியுடனிருக்கும் தெரதா, உடல் நலமில்லையென பணி விலக்கு பெற்று, சமையலறைக் குப்பையிலிருந்து காய்கறித் தோல்களைத் தெரியாமல் எடுத்துவர, அவற்றை வேகவைத்து உண்டு பசியாற்றிக் கொள்கின்றனர். ஜப்பானிய மேற்பர்வையாளன் கிரிஹாரா, தனக்கு மேலுள்ள ஜப்பானிய அதிகாரி நோர்கேயிடம் இதைப் புகார் செய்கிறான். கைதான ஜப்பானிய அதிகாரிகளுக்கு, ஜப்பானியக் கைதிகளைப் பராமரிக்கும் பணியும், சில வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. காஜி சாக்குகளைக் கிழித்து உடையாக அணிவது விதிமீறல் என்று நோர்கே மிரட்டுகிறான்.தெரதாவுக்கு நல்ல காய்ச்சல். காஜி ஜப்பானிய மொழிபெயர்ப்பாளனிடம் தெரதாவுக்கு மருந்து கேட்க, அவன் மறுக்க, பிரச்சினை பெரிதாகிறது. ரஷ்ய மேலதிகாரியிடம் அழைத்துச் செல்லப்படுகிறான். தண்டனையாக, காஜியைக் கடினமான ரயில் பாதை வேலைக்கு அனுப்ப முடிவாகிறது. எப்படியோ தெரதாவுக்கு காஜி மருந்து கொண்டுவந்து கொடுக்கிறான். ரயில்பாதை வேலைக்குச் சென்று திரும்பும் காஜிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தெரதா உயிருடன் இல்லை. மிகவும் மோசமான உடல் நிலையுடன், சமையலறைக் காய்கறிக் கழிவுகளைச் சேகரித்து கொண்டிருக்கும் தெரதா, மேற்பார்வையாளன் கிரிஹாராவினால் பிடிக்கப்பட்டு விடுகிறாள். தண்டனையாகக் கழிப்பறையின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது உள்ளே விழ, உயிர் பிரிந்துவிடுகிறது.

தான் முழுமையாக நம்பிக்கை வைத்திருந்த சோவியத் சோசலிச அரசு, ஜப்பானிய அரசை விட எவ்வகையிலும் மேம்பட்டதாக இல்லை எனக் காஜி உணருகிறான். மனித உயிருக்கு மரியாதையும் பாதுகாப்பும் அளிக்காத ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இனியும் தான் இருக்கப் போவதில்லை என்று அன்றிரவே அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவு செய்கிறான். தன் கோபம் தீர, தெரதாவின் சாவுக்கு காரணமான கிரிஹாராவை அடித்துக் கொன்று அதே கழிப்பறைக் கழிவுத் தொட்டியில் போட்டுவிட்டு, காஜி தப்பித்து விடுகிறான். கால் போன பக்கம் நடந்துகொண்டிருக்கிறான். பசி, களைப்பு. உடம்பில் தெம்பில்லை. செல்லும் இடமெல்லாம் ஜப்பானியன் என்றாலே சீனர்கள் காறி உமிழ்கிறார்கள். எட்டி உதைக்கிறார்கள். ஊரை விட்டு வெளியே வந்துவிடுகிறான். தன் உயிரைப் பிடித்துக்கொண்டு எப்படியும் மனைவி மிச்சிகோவை அடைவதற்காக அந்த மஞ்சூரிய வனாந்திர வெளியில் நடக்க ஆரம்பிக்கிறான். கடும் பனிக் காலம். பனியும் காற்றும் மூர்க்கமாகத் தாக்க, நடக்கமுடியமல் பலமுறை கீழே விழுகிறான். இறுதியில் ஒன்றும் முடியாமல் விழுந்துகிடக்க காஜியை பனி மூடத்தொடங்குகிறது. இறந்துவிடுகிறான். ஹ்யூமன் கண்டிஷன் முற்றுப்பெறுகிறது. ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்த பின்னரும், கீழை ஆசிய நாடுகளின் காடுகளில் சிதறி இருந்த ஜப்பானிய ராணுவப் படைப் பிரிவுகள் பல கலைக்கப்படாமலிருந்தன. மேலதிகார வன்முறை எப்பொழுதும் போல் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் தண்டனை எனும் பெயரில் பல கீழ்நிலை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைப்பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களைக் கொண்ட ‘‘The Emperor's Naked Army Marches On' எனும் முக்கிய ஆவணப்படம் ஒன்று உண்டு. இத்தகைய ஒரு ஜப்பானிய ராணுவப்பிரிவையும் அதன் தலைவனையும் ஹ்யூமன் கண்டிஷனின் மூன்றாவது பாகத்தில் சந்திக்கிறோம். ‘ஹ்யூமன் கண்டிஷன்' நாவல் திரைப்படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில், கதாநாயகன் காஜி, நாவலில் வருவது போல, இறுதியில் சாவது கூடாது எனும் வேண்டுகோளுடன் பல கடிதங்கள் வந்ததாகக் கோபயாஷி, தன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். காஜியின் மரணம், மனிதத்துவத்தின் முடிவு அல்ல, மறுபிறப்பு; காஜியின் முடிவு, போரை மறுத்து மனித உணர்வுகளை மதிப்பவர் அனைவர் உள்ளங்களிலும் போர் எனும் மனித குலத்தின் அவலம் என்றாவது ஒரு நாள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனும் நம்பிக்கையை விதைக்கும் என்கிறார் கோபயாஷி.

ஹ்யூமன் கண்டிஷனின் முடிவில், மஞ்சூரியப் பரந்த வெளியில் நடந்து செல்லும் காஜியின் இறுதிப்பயணத்தின் போது, அவனது எண்ன அலைகளைப் பின்னுரையாக (Epilogue) நாம் கேட்பது, மனதைப் பிழியும் இசைக் காவியத்தின் இறுதிப் பகுதியைக் கேட்டு முடிப்பது போன்ற உன்னத அனுபவம். நகதாய் காஜியின் மனநிலையைத் திரையில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார். ஹ்யூமன் கண்டிஷனின் மூன்றாவது பகுதிக்காக நலிந்த, களைப்பான தோற்றத்தைப் பெற, கோபயாஷியுடன் பல இரவுகள் தூங்காமல் சீட்டு விளையாடியிருக்கிறார். இது படமாக்கப் படும்போது, அகிரா குரசோவாவின் யொஜிம்போ, சஞ்சுரோ படங்களிலும் நகதாய் நடித்துக்கொண்டிருந்தார்.

நிழலும் ஒளியும் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள கருப்பு வெள்ளைத் திரைப்படம் இது. இருளின் ஆழம் நம்மைத் தாக்குகிறது. பிம்பங்களின் வலிமையை இப்படம் உணர்த்திய அளவுக்கு சமமாக வெகுசில திரைப்படங்களை மட்டுமே சொல்ல முடியும். சிறந்த கருப்பு வெள்ளைத் திரைப்படங்களைத் தேடிக் கண்டு ரசிப்பவர்களுக்கு கோபயாஷியின் ஹ்யூமன் கண்டிஷனின் மூன்று படங்களுடன், ஹரகிரி, சாமுராய் கலகம் ஆகிய கருப்பு வெள்ளைப் படங்கள், மறக்கமுடியாத விருந்தாக அமையும். இத் தொகுப்பின் ஒளிப்பதிவாளர் யொஷியோ மியாஜிமா. அடுத்து வந்த கோபயாஷியின் ஹரகிரி , வண்ணப் படமான கய்தான் ஆகியவற்றிலும் இவரின் அற்புதமான ஒளிப்பதிவைக் காணலாம்.

ஹ்யூமன் கண்டிஷன் சித்தரிக்கும் மஞ்சூரியாவின் பரந்த நிலப்பரப்பு, வானப்பரப்பு , மேகப்பரப்புக் காட்சிகளின் அழகை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. மஞ்சூரிய பரந்தவெளிகளும், வானவெளியில் நிறைந்துள்ள கருமேகங்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோபயாஷி மேகங்களின் ரசிகர். அவர் நினைத்ததற்கேற்ப மேகங்கள் அமையாததால் ஹரகிரியின் புகழ் பெற்ற இறுதிச் சண்டை படப்பிடிப்பு மூன்று நாட்கள் தள்ளிப்போடப்பட்டது பற்றி பின்னர் நகதாய் தன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். காட்சிகளின் பின்புலங்களாக மேகங்களை, அவற்றின் ஆழமான அழகுடன் காணும்போது ஓவியர் கான்ஸ்டபிளின் மேகங்கள் நினைவுக்கு வருகின்றன.

தொகுப்பு முழுவதும் அதிராது பின்புலத்தில் ஒலிக்கும் இசை. பல முக்கியக் காட்சிகள் இசையின்றிக் காட்டப்பட்டுள்ளன. ஹரகிரியிலிருந்துதான் ஜப்பானிய செவ்வியல் இசையை நவீன(Avant-garde) உத்திகளுடன் கோபயாஷி பயன்படுத்தத் தொடங்கினார்.

ஹ்யூமன் கண்டிஷன் தொகுப்பைத் தனித் தனியாகவும், மொத்தமாகவும் பார்த்திருக்கிறேன். ஒரே நாளில் மொத்தமாகப் பார்ப்பது, ஒரு சிறந்த ஆயிரம் பக்க நாவலை ஒரே மூச்சில் படித்து முடிப்பது போன்ற அனுபவம். தனித் தனியாகப் பார்ப்பதை விட அதிகத் திருப்தியளிக்கும் அனுபவம். ஒரு நிமிடம் கூடத் தொய்வில்லாமல் ஒன்பதரை மணி நேரம் போவதே தெரியாமல் ஓடும் தொகுப்பு. பல திரை மேதைகள் இயக்கி அளித்துள்ள, சிறந்த முப்படத் தொகுப்புகளைக் கண்டு ரசித்திருக்கிறேன். அனைத்தையும் கோபயாஷியின் இத் தொகுப்பு பல படிகள் மிஞ்சிவிட்டது.

திரைப்படம் எடுப்பதில் கோபயாஷி எவ்வித சமரசமும் செய்ததில்லை. ஹ்யூமன் கண்டிஷன் தொகுப்பு தயாரிக்கப் படும்போதே மிகுந்த சர்ச்சைக்குள்ளான ஒன்று. எத்தனையோ தடங்கல்களுக்கு மத்தியிலும் இத் தொகுப்பின் மூன்று திரைப்படங்களையும் மூன்று வருடங்களில் மிகச்சிறந்த முறையில் இயக்கி அளித்திருக்கிறார். கோபயாஷியின் அடுத்த சிறந்த தயாரிப்பான ‘ஹரகிரி' ஒரே வருடத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம்.

ஒரு நாட்டின் கடந்த காலம் மறுபரிசீலனைக்குரியது. நடந்த தவறுகள் மீண்டும் நிகழாமலிருக்க சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப்பட்டு மறுவாசிப்பு செய்யப்படுதல் அவசியம். திரைப்படங்கள் வெறும் புனைவுகளை மட்டும் பேசுபவையல்ல. ஆவணப்படங்களின் தாக்கம் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. அவை வெகு ஜனங்களை முழுமையாக எட்டுவதில் பல சிரமங்கள் உண்டு. ஆவணப்படங்கள் அல்லாது, வழக்கமான வெகுஜனத் திரைப்படங்கள் மூலம் தமது நாட்டின் கடந்த கசப்பான சரித்திர நிகழ்வுகளைத் திரைப்படங்களாகப் பல திரை மேதைகள் பதிவு செய்துள்ளனர். உலகப் போர்களும், உள்நாட்டுப் போர்களும், மக்கள் எழுச்சிகளும் திரைப்படங்களாக வெளி வந்துள்ளன.

நம் நாட்டைப் பொருத்தவரையில் நடந்த போர்கள், கலவரங்கள், கறைபடிந்த நெருக்கடி நிலை நாட்கள் போன்றவை பற்றிய திரைப்படப் பதிவுகள் அரிது. இத்தனைக்கும் உலகிலேயே அதிகமான திரைப்படங்களைத் தயரிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளோம்.

இரண்டாம் உலகப்போரின் கசப்பான அனுபவங்கள், ஜப்பானியருக்குப் பாடமாக அமைந்தன. தவறுகளை உணரச் செய்தன. கதிரவனின் வழித் தோன்றல் என ஜப்பானியரால் வணங்கப்பட்டு வந்த பரம்பரையில் தோன்றிய அரசர் ஹிரொ ஹித்தோ, போருக்குப்பின் முடி துறந்தார். ஜப்பான் ராணுவ பலத்தைக் குறைத்தது. அணு ஆயுதங்களை நிராகரித்தது. முறையான ராணுவம் தற்போது அங்கு இல்லை எனலாம். அணு ஆயுதம் உட்பட போருக்கான ஆயுதங்களின் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் போருக்குப் பின் இயற்றப்பட்ட ஜப்பானிய அரசியல் சட்டம் தடை செய்கிறது. வட கொரியாவின் தற்போதைய அணு ஆயுதச் சோதனைகளையும், போர் அச்சுறுதல்களையும், சீனாவின் அதிகரிக்கும் ராணுவ பலத்தையும் எதிர்கொள்ள ஜப்பான் இந்த நிலையிலிருந்து இனி மாறலாம். இதுவரை ஜப்பானில் ஆயுதங்களுக்கு எதிராக இருக்கும் சட்டம் மாற்றப்படவில்லை.

ஹ்யூமன் கண்டிஷனின் மூன்று திரைப்படங்களும் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியவை. இருந்தும், முந்தைய தவறுகளை சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து அழித்துவிட விரும்பும் ஜப்பானிய அரச இயந்திரம், தனது நாட்டின் போர்க்கால அரசையும் ராணுவத்தையும் தீவிரமாக விமரிசிக்கும் இத்தொகுப்பை உலகம் அறிவதை விரும்பவில்லை. கோபயாஷியின் விமர்சனங்களை ஜப்பானிய அரசு மறக்கவும் மறைக்கவுமே முயல்கிறது. பிற சாதாரணமான இயக்குநர்களின் படங்களை உலகப் படவிழாக்களில் காட்ட விழையும் முனைப்பையும் ஊக்கத்தையும் கோபயாஷியின் படங்களுக்கு ஜப்பான் தருவதில்லை. ஏறத்தாழ இருட்டடிப்பு என்றே சொல்லலாம். அதிகார வர்க்கத்துக்கு கருத்துகள் மட்டுமே புரியும் போலும்; கலையை அது உணர்வதில்லை. எனினும் திரைப்படக் கலையின் மகாமேதை ஒரு ஜப்பானியனே என்று ஜப்பான் புரிந்துகொண்டு கொண்டாடும் காலமும் வரும் என்று நம்புவோம்.

நுண்ணுணர்வுள்ள தீவிர ரசிகர்கள் இருக்கும்வரை எந்தக் கலைஞனும் அழிவதில்லை, மொழி, நாடு, காலத்தைத் தாண்டி அவன் கலை உயிர்ப்புடன் இருந்துகொண்டேயிருக்கும்.

கிடைத்தற்கரிய திரைப்படங்களைச் சிறந்த முறையில் பதிவு செய்து உலகுக்கு அளித்து வரும் கிரைட்டீரியனின் (Criterion) ஜானஸ் நிறுவனம், ஹ்யூமன் கண்டிஷன் தொகுப்பை தொண்ணூற்றொன்பதில் வெளியிட்டது. மீண்டும் இவ்வருடம் செப்டெம்பரில் ஹ்யூமன் கண்டிஷன், கூடிய தரத்துடன் மறுபதிவு செய்யப்பட்டு நான்கு டிவிடி தொகுப்பாக கிரைட்டீரியனால் வெளியிடப்படுகிறது. உலகெங்குமுள்ள கோபயாஷி ரசிகர்கள், வரும் செப்டெம்பர் 8 ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நன்றி: தமிழினி
http://tamizhini.com/

1 comment:

DANIEL JAMES said...

தோழரே சிறந்த பதிவு